அந்த இருள் அவ்வளவு இலகுவாக இருந்திருக்க வேண்டும் பௌர்ணமி இருளைத் தின்று உடல் கூசும் மெல்லிய ஒளியை எங்கும் பரப்பியது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் சீறின.
பெட்ரோல் பங்கை ஓட்டிய சாலையோரத்தில் முழு சிரிப்போடு மையில் கல்லை போல ஒருத்தி நின்றிருந்தாள். பாவப்பட்டு உருகி வழியும் முகவாகு, கூர்மையான கண்கள் , வகிடெடுத்து சீவிய முடி தோல் மீது சர்பமாய் வீற்றிருக்கும் மல்லிகை பூ. அந்த இருளிலும் சிலுசிலுக்கும் ஜிகினா போட்ட சேலை . முந்தானையை படபடப்போடு நோண்டிக் கொண்டிருக்கும் கைகள். சாலையின் இடதும் வலதும் அவளது கண்கள் மாறி,மாறி பயணப்பட்டன.
பயத்தைப் போக்க வாய் நிறைய வெற்றிலை போட்டு மென்று கொண்டே நின்றிருந்தாள்.
மஞ்சள் கலர் நம்பர் பிளேட் போட்ட வெள்ளைக் காரொன்று மெல்ல ஊர்ந்து வந்து நின்றது.வண்டியிலிருந்தவன் கார் கண்ணாடியை இறக்கி அவளை பார்த்தான்.அவன் விழிகளில் நிறைந்திருந்த தூய்மை அவனை நம்பி வண்டியில் ஏறலாம் என அவளுக்கு தோன்றியது. எதுவும் பேரம் பேசாமல் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.வண்டி மெல்ல ஊர்ந்து நகர்ந்து பின்னர் வேகமெடுத்தது.
அவளின் முதுகுப்பகுதியில் வியர்வை நீர் திவலைகள் ஊர்ந்து ஓடின.காதோரமாய் ஒதுங்கி நின்றிருந்த அவள் முடி காற்றுக்கு அவள் கன்னங்களை உரசியது. வண்டியை ஓட்டிக்கொண்டே அவளது மார்பை ரசித்த அவனை கவனித்து விட்டாள். படக்கென மாரப்பை சரிசெய்து கொண்டு திரும்பிக் கொண்டாள். மற்ற கிராக்கிகளை போல் அல்லாத அவளின் செய்கைகளை பார்த்த அவனுக்கு சந்தேசம் வந்தது. "வேர்க்குதா ? " என கேட்டுக் கொண்டே அவனது விரல்கள் மெல்ல அவளது தொடையில் கை வைத்தது. கூசிப்போன அவளது தொடை அவன் கைகளை விடுவிக்க துடித்தது.
" நீ உண்மையாவே ரூட்டு தானா? "
" ஆமா ஏன் பாத்தா தெரியலையா?
"நீ நடந்துக்கிறதெல்லாம் பாத்தா அப்டி தெரியலையே,தொழிலுக்கு புதுசா "
"ம்...ஒரு வாரமாகுது,புருசன் சரியில்ல குடிகாரேன். கஞ்சிக்கும் வழியில்ல,அதான் ப்ரண்ட் கூப்புட்டானு இதுல இறங்கிட்டேன்."
"பார்றா, இதென்ன காய்கறி ஏவாரமா? சீக்கு வந்து சாகப்போறடி"
"ஆமா அப்டியாச்சும் சாகுறேன். இந்த வக்கத்தவன் கூட வாழ்றதுக்கு பதிலா செத்துட்டாக்கூட நிம்மதி "
வண்டி மெதுவாக மோட்டல்கள் இருக்கும் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
"எனக்கு ரொம்ப பசிக்குது,காலையில இருந்து சாப்பிடல ,சோறு சாப்புட்டு அப்பறமா போவமா? "
இதை கேட்டதும் அவனது முகம் சுறுங்கிப் போனது. சாலையோரமாக இருந்த ஒரு தள்ளு வண்டி கடையை ஒட்டி வண்டியை நிறுத்தினான். கொத்து புரோட்டா வேண்டுமென கேட்டு வாங்கி சாப்பிட்டாள். கொத்து புரோட்டாவை குழந்தையின் ரசனையோடு சாப்பிடும் அவளை பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. கடைசியாக தட்டிலிருந்த சால்னாவை கூட விடாமல் வழித்து சாப்பிட்டாள்.
" ஆம்லெட் வேணுமா? "
"இல்ல கலக்கி " என அசடு வழிந்தாள்.
பொதுவாக வண்டியை காட்டோரமாக நிறுத்தி விட்டு லைட் எல்லாம் ஆப் செய்து விட்டு தான் மேட்டரை துவங்குவார்கள். வண்டி அதற்கான இடத்தை நோக்கி தான் நகர்ந்து கொண்டிருந்தது.
அவளது வாழ்வில் இதற்கு முன்பாக இவனைபோலொரு அக்கறையான ஆண்மகனை பார்த்ததேயில்லை. தன்னை சாதாரண ஜீவனாக நினைத்ததை வைத்து அவள் சிலிர்த்தாள்.பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் கலை ஒழுகும் முகம்,முப்பது வயதை ஒத்த உடல் வாகு, இறுகிய மார்பு என பார்க்க சுமாரான ஆம்பளையானாகத்தான் அவளுக்குத் தெரிந்தான். அதற்கும் மேலாக தன் மீது அவன் காட்டும் பரிவையும், சக மனுசியை போல நடத்துவதை தான் அதீதமாக நேசித்தாள். இதற்கு முன்பாக இப்படியொரு அன்பை அவள் பெற்றதேயில்லை என்பது தான் அதற்கு காரணம்.
வண்டி ஓட்டிக் கொண்டே கார் கண்ணாடியை இறக்கிவிட்டு சிகிரெட்டை பற்ற வைத்தான். இரண்டு இழுப்பு இழுத்த பிற்பாடு அவள் , அவனிடமிருந்த சிகிரெட்டை வாங்கி புகைத்தாள்.
அவள் சிகிரெட்டை விரல்களுக்குள் சிக்கவிட்டு புகைத்த விதம் பழக்கப்பட்டவர்களை போலே இருந்தது.
வந்த பாதையை மறந்து மீண்டும் யூடர்ன் போட்டு வண்டி திரும்பியது.
" ஏன் மேட்டர் பண்ண வேணாமா? "
"இல்ல மூடுப் போயிருச்சு "
" ஓ..ஆமா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"
"இல்லை ..ஏன் கட்டிக்க போறியா என்ன?"
" ஏன் கட்டிக்க மாட்டனா"
" ஓ அந்த ஆசை வேற இருக்கா உனக்கு? "
இதை கேட்டதும் அவளது முகம் வெம்மிப்போனது. அவனை ஒரு புழுவை பார்ப்பது போல பார்த்தாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் வந்தவன் அவளை ஏற்றிய இடத்திலே வண்டியை நிறுத்தினான்.
" இங்க வேணாம்,சிட்டிக்குள்ள விட்ரு நான் அப்படியே வீட்டுக்கு போறேன்."
மீண்டும் வண்டி நகரத்தை நோக்கி நகர்ந்தது. கொஞ்ச நேரம் மௌனம் அங்கே இசையாகியிருந்தது. சப்தங்களற்ற மௌனத்தின் இசையை கலைக்க இருவராலும் முடியவில்லை.
" நான் கூப்புட்டா ஏன் கூட வந்துருவியா? "
"வரமாட்டேன்,எப்படி பார்த்தாலும் எல்லா ஆம்பளங்களும் ஒண்ணு தான?"
" ஹே... நான் சீரியசா கேக்குறேன்,ஏன் கூட வீட்டுக்கு வந்துட்றயா?"
" உண்மையாவா? "
" ஆமா நாளைக்கு இதே டைம் உன்ன பிக்கப் பண்ண இடத்துலயே வந்து நில்லு, நான் வந்துட்றேன்"
அவள் எதுவும் பேசவில்லை. இருவருக்கிடையே பெரிய மௌனம் நிலவியது. பின்பு அவள் தலையை மட்டும் அசைத்தாள். அவன் மீது முழுமையாக நம்பிக்கை இல்லை என்றாலும் மனிதர்களுக்குள் ஒழிந்திருக்கும் அற்ப ஆசைகள் யாரைத்தான் விட்டது.
மறு நாள் அதே இரவில், அதே நேரத்தில், அதே இடத்தில் மழைத்துளிகள் மண்ணில் தாளமிட்டுக் கொண்டிருந்தன. அவள் பழைய நைலான் சேலையை உடுத்தி வந்து நின்றிருந்தாள். அவன் எப்படியும் வருவான் எனும் நம்பிக்கையில் காத்திருந்தாள்.
என்றுமில்லாத அவளது முகத்தில் மஞ்சள் தேய்த்து குளித்த பிரகாசம் மிளிர்ந்தது. மாரியம்மனை போல் அந்த இருளிலும் அவள் ஒளியாய் தெரிந்தாள். சில கார்கள் அவளருகே பேரம் பேச முற்பட்டு அவள் மறுத்ததால் நகர்ந்து கொண்டிருந்தன.
அந்த சாலையின் இன்னொரு மூலையில் புளியமரத்தின் பின்பே ஒளிந்து கொண்டு அவன்,அவளை கவனித்தான்.அந்த மஞ்சள் பூசியவளின் கண்கள் நிலை வெளிச்சத்தில் கண்ணீர் துளிகளோடு மிதந்தன. கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தவன் அங்கிருந்து புறப்பட்டான்.விடியல் வரை காத்திருந்த அவள் விழிகளை சுற்றி கருமை படிந்திருந்தது. இரவிலிருந்து நின்றிருக்கும் அவளை எப்படியேனும் 100ஆண்களாவது மேட்டருக்கு அழைத்திருக்கலாம். நேரம் ஆக ,ஆக நெஞ்சு அடைப்பது போல துக்கம் வந்தாலும் கட்டுபடுத்துக் கொண்டு எப்படியும் வந்து விடுவானென காத்திருந்தாள்.இருள் விலகி சூரிய ஒளி மெல்ல பூமியை விடியலுக்கு கூட்டிச்சென்றது.ஆனால் அவளுக்கான ஒளியை எந்த சூரியனும் தந்து விடப்போவதில்லை என அவளுக்கு தோன்றியது.
கருத்துகள்
கருத்துரையிடுக