2025
சொல்வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது.
சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது. என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட. என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது.
என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது.
கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் என நம்புகிறேன். முடிந்த அளவுக்கு சமூக வலை தள பயன்பாட்டை குறைத்து கொண்டு, ஆரோக்கியத்தின் பால் கவனம் செலுத்த விரும்புகிறேன். நம்முடன் கடைசி வர போவது இந்த உயிருள்ள உடல் தான். அது பூத உடலாக மாறுவது இயற்கை தீர்மானித்த ஒன்றாக தான் இருக்க வேண்டும். இனி எனக்கு நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் நான் தான் காரணம் என பலியிட்டு கொள்ள விரும்புகிறேன். அதன் வழியே நான் என்னை கண்டடைய முடியும் என ஆழமாக நம்புகிறேன். என்னை போன்று எல்லாரும் இந்த ஆண்டை நம்பிக்கையின் பெயரால் அணுக வேண்டுகிறேன்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
"யாரிடத்தில் தயவு இருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார். "
- வள்ளலார்.
கருத்துகள்
கருத்துரையிடுக