மதுரை அரசு மருத்துவமனையில் சகீதமாக கூட்டம் அலை மோதியது. பொதுவாக
காலை பொழுதுகளில் அரசு பொது மருத்துவமனையில்
வயோதிக கூட்டம் வாசலில் காத்து கிடக்கும். ஒரு ஏழைக்கு அரசின் மருத்துவமனைகள் எத்தனை
பயனுள்ள விஷயம் என அப்போது
தான் பார்த்தால் தான் தெரியும்.
படிப்பறிவு இல்லாத முதியோர்கள் பெற்ற
பிள்ளைகளின் கவனிப்பாறற்று முதுமையில் பிறக்கும் நோயை எதிர்கொள்ள வேண்டிய சூழல்
நிலவுகிறது. எழுத்தறிவு அற்ற அவர்கள் வார்டு
வார்டாக அலைந்து தங்களது
நோய்க்கு ஊக்கமளிக்கின்றனர். நோய்வாய்ப்பட்ட முதியவர் நுழைவு சீட்டை பெற்று ரத்த பரிசோதனை போன்ற இதர சோதனை கூடங்கள் நடத்தும் மருத்துவமனையின்
வெவ்வேறு வார்டுகளை கண்டறிந்து தங்கள் நோய்க்கு சிகிச்சை பெறும்
முன் மரித்து விடுகிறார்கள். எத்தனையோ பெருசுகள் அரசு மருத்துவமனையில் ஓபி சீட் வாங்க முடியாமல் இறந்து போயிருக்கிறார்கள் என்பது அறியப்படாத கதை.
அன்று மதிய நேரத்தில் அவசர ஊர்திகள் ரிங்காரமிட்டவாறு ஒரு உயிரை தன் மீது சுமந்து கொண்டே வந்தது.
அந்த வண்டிக்கு எதிரே வந்த மெர்சி என்ற செவிலிய பெண்மணி தன் மார்பின் இரு பக்கமும் குறி போட்டு அந்த உயிருக்காக வேண்டிக் கொண்டாள். ஷிப்ட் முடிந்து தன் அறைக்கு செல்ல அவள் துடித்துக் கொண்டு
நடந்தாலும் அவள் கால்கள் நடுங்கின. நடந்து நடந்து நோயாளிகளுக்கு பணிவிடை
செய்யும் செவிலிய பெண்களுக்கு இதயத்தில் எத்தனை பேரன்பு நிறைந்திருக்கும் என எப்போதாவது நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?
எத்தனை துர்நாற்றம், ரத்தம், மற்றும் நோயாளிகளின்
கழிவுகளை மெர்சிவின் கண்கள் பார்த்திருக்கும், ஆனால் அவளது முகம் எப்போதும் குழந்தையின் முகத்தை போல் புன்னகைத்துக்
கொண்டே இருக்கும். வெளிர் நிறத்தில் பொட்டில்லாத
மெர்சியின் முகம் மலையாள பெண்களின் சாயலில்
இருக்கும். கருணை நிறைந்த கண்கள், வலது கழுத்தோரம் கட்டை விரல் அளவிற்கு மச்சம் என மொத்தமாக அவளொரு வெள்ளையுடை அணிந்த தேவதை. அந்த பேரன்பு மிக்க முகத்தை காண அவள்
பணிபுரியும் குழந்தைகள் பிரிவில் உள்ள நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் கொடுத்து வைத்திருக்க
வேண்டும்.
மெர்சி வெள்ளை உடையில் அந்த மருத்துவமனை வாசலை
நோக்கி நடந்து வருகையில் இருளிலிருந்து பிறந்த தூய ஒளி போல் தெரிந்தாள்.
கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்ட மெர்சி
ஒரு கிறிஸ்துவ குடும்பத்திலிருந்து வந்தவள். அவளது தந்தை ஒரு மீனவர்
கிட்டத்தட்ட பரம்பரை, பரம்பரையாக மீனவர்களாக இருந்து வந்த குடும்பம்.
மெர்சிவின் தாய் ஒரு மலையாளி அதனாலோ என்னவோ அவள் முகச் சாயல் ஒரு மலையாளி பெண்ணை போலிருக்கும். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான மெர்சி அரசு செவிலியராக பணியாற்ற துவங்கியதிலிருந்து தன்
குடும்பத்தோடு சேர்ந்து
வாழ்ந்ததே இல்லை. பிள்ளைகள் ஒரு பக்கம் தாயிடம் வளர, அவளது கணவர் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருவரும் பார்த்து கொள்வதோ வருடத்துக்கு ஒரு
முறையோ, இரண்டு முறையோ தானிருக்கும்.
அவள் மதுரையில் தன் சகதோழியுடன்
சேர்ந்து வீடெடுத்து தங்கி பணிபுரிகிறாள். எத்தனையோ ஊரில் பணிபுரிந்திருக்கும் மெர்சி வெளியுலகத்தை கண்டதே இல்லை. மருத்துவமனை, நோயாளி, மருந்துகள் அதை விட்டால் வீடு இதுதான் தினசரி அவளது அலுவல்கள்.
கடந்த நாலு மாத காலமாக மதுரையில்
பணிபுரியும் அவளுக்கு மதுரைக்கும் தன் ஊருக்கும் போக கொஞ்சம் தூரம்
தான் இருக்கிறது என சந்தோஷத்தை தவிர வேறு சந்தோசங்கள் இல்லை. வெயில் உக்கிரமாக அடித்துக் கொண்டிருந்தது. அவளது
உள்ளாடையின் வேர்வை கசகசப்பு அவளுக்கு எரிச்சலூட்டியது. அறைக்கு சென்று எல்லாவற்றையும் கலைத்து எறிந்து விட்டு நைட்டிக்குள் தன்னை புகுத்திக் கொள்ள வேண்டும் என புலம்பிக்கொண்டாள்.
அவள் நடந்து கொண்டிருந்த சாலை ஓரத்தில் முதியவர் ஒருவர் கடுமையான
வலிப்பால் துடித்துக் கொண்டிருந்தார். வாகனங்கள் ஒவ்வொன்றும்
அதிவேகமாக ஊர்ந்து கொண்டிருந்தன. அந்த பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் அந்த முதியவரது கையில் இரும்பை கொடுத்து வலிப்பை அடக்கிப்
பார்த்தனர்.
வலிப்பின் உச்சத்தில் அவரது வாயிலிருந்து
நுரை ஒழுகி கொண்டிருந்தது. அதனை பார்த்துக் கொண்டிருந்த மெர்சி வேகமாக கூட்டத்தை விளக்கி
கொண்டு உள்ளே சென்று முதியவரது கையை பிடித்து பார்த்தாள். நாடித்துடிப்பு உச்சத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்தவர்களிடம்
“உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு
போகணும்.. யாராச்சும் ரெண்டு பேரு பிடிங்க”
என அவள் சொல்லி முடிக்கும் முன் கூட்டத்தில் பாதி கரைந்து விட்டது.
ஒரு பக்கம் வலிப்பு நின்று விட்டாலும் மற்றொரு பக்கம் உயிர் ஆபத்தை நெருங்கிக்
கொண்டிருந்தது அச்சமயம் கூட்டத்திலிருந்த ஒருவர்
“அதே வலிப்பு விட்டுருச்சில நீ போமா.. பெரிசு
மகன வரச் சொல்லிருக்கோம்”
“ஹலோ அவர் சீரியஸா
இருக்காருங்க.. ஆஸ்பத்திரி இங்கனதான இருக்கு ரெண்டு பேர் புடிச்சீங்கன்னா
கொண்டாந்து விட்றலாம்ல”
“ஆமா இந்த ஆளுக்கு இதே
பொழப்பு. குடிக்க.. ரோட்ல பொளந்து போட்டு
கிடக்க.. இதெல்லாம் அப்டியே
விட்டுட்டு போயிரனும் தாயி, அவரு மகன் வந்து பாத்துகுவான்”
தங்களுக்குள் அந்த பெரியவரை பற்றி பொரணி பேசிக்கொண்டே கூட்டம் கலைந்தது. பெரியவர் நிதானம் அடைந்து விட்டாலும் அவரது
நாடித்துடிப்பு உச்சத்திலிருந்தது. மெர்சிவிற்கு அவரை அங்கேயே விட்டுச்
செல்ல மனமில்லை, எப்படியாவது அவரை காப்பாற்றி
விட வேண்டும் என துடித்தாள். மருத்துவமனைக்கு போனில் அழைத்தால்
யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை. அப்போது பைக்கில் அங்கு ஒரு இளைஞர் வந்து கொண்டிருந்தான். உடனே மெர்சி அவன் எதிரே சென்று வண்டியை
மறித்தாள்.
"தம்பி இந்த பெரியவரு முடியாம இருக்கிறாருபா.. நீ ஒரு கை பிடிச்சனா ஹாஸ்பிடல சேர்த்துறலாம்”
அவன் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான்.
“அக்கா இவர் மகென் அங்குட்டு தான் இருக்காப்ல.. இங்கேயே இருங்க நான் போய் கூட்டியாரேன்”
அவள் அவனது கரங்களைப்பற்றி “தம்பி அதுக்கெல்லாம் நேரமில்லப்பா, சீக்கிரமே தூக்கிட்டு போன அவரை காப்பாத்திடலாம், ப்ளீஸ்பா வண்டில தூக்கி ஒக்கார வச்சுக்கோ
நான் புடிச்சுக்குறேன்”
அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை தேவையில்லாமல்
சிக்கிவிட்டோமா என தோன்றியிருக்க வேண்டும். இருந்தாலும் அழகான பெண் ஒருத்தி நம்மிடம் உதவி கேட்கும் போது எப்படி மறுக்க
முடியும்.
உடனே
பெரியவரை இரண்டு பக்கமாக
பிடித்து தூக்கி நிறுத்தி மெர்சியை
பிடிக்க சொல்லிவிட்டு வண்டியில் ஏறினான்.
மெர்சி
எலும்பும் தோலுமாயிருந்த பெரியவரை தூக்க முயன்றாள். ஆனால் அவளால் தூக்க முடியவில்லை. அதனை கவனித்துக் கொண்டிருந்த
பக்கத்து கடையிலிருந்த
ஒரு ஆள் ஓடிவந்து பெரியவரை தூக்கி வண்டியில் ஏற்றினார். அவரது தோளிலிருந்த துண்டை எடுத்து அந்த இளைஞனோடு
சேர்த்து பெரியவரை கட்டினார். தானும் பின்னாடி ஏறிக்கொண்டு “விடுறா வண்டிய” என்றார்.
மெர்சி
வேகமாக நடந்து மருத்துவமனையை நெருங்கினாள். அதற்குள் அவசர பிரிவில் பெரியவருக்கு முதலுதவியை துவங்கப்பட்டிருந்தன. மெர்சி உள்ளே சென்று தனக்கு தெரிந்தவர்
தான் என்பது போல பாவனைகள் செய்து கொண்டாள். உடனுக்குடன் அவருக்கு சிகிச்சைகள் செய்ய
ஸ்டெச்சர் உள்ளே சென்றது. அவை அத்தனையும் அங்கிருந்து இளைஞன்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மெர்சி அவசர சிகிச்சை அறைக்குள்
பெரியவர் அழைத்து செல்லப்பட்ட
பின்பு தான் பெருமூச்சு விட்டாள்.
“என்ன பிரச்சனக்கா?”
“தெரிலடா ஆனா பல்ஸ் ரொம்ப வீக்காயிருக்கு,
“ரொம்ப தேங்க்ஸ் டா, கொஞ்ச நேரம் லேட்டா வந்திருந்தாலும், அவரு உசுரு போயிருக்கும்” என்றாள்.
அப்போதுதான் மெர்சி அவன் கண்களை முழுமையாக பார்த்தாள்.
“சாம்பல் நிறத்தில் மிளிரும் கண்களும், அடர்ந்த முடியும் அவனை எடுப்பான இளைஞனாக காட்டின. மெர்சியை விட உயரமான இளைஞனாக
இருந்தாலும் கொஞ்சம் ஒல்லியான உடல்வாகுதான் அவனுக்கு. மெர்சிக்கு பார்த்த மாத்திரத்திலே அவனை பிடித்து போய்விட்டது. மெர்சியால்
அவனது கண்களை நேருக்கு
நேராக சந்தித்து பேச முடியவில்லை. அவனால் அதனை உணர்ந்திருக்க முடியுமோ என்னவோ அவளை எதிர்கொள்ள இயலாமல் உடனே அந்த இடத்தை
விட்டு நகர்ந்து விட்டான்.
மெர்சி தன் அறைக்கு சென்று குளித்துவிட்டு
தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டாள். எப்படியாவது அந்த பெரியவரை காப்பாற்ற வேண்டும் என அவள் துடித்த துடிப்பு அவளை பலவிதமாக யோசிக்க வைத்தது. பின்னர் அவனின் கண்கள் இளமை துடிப்போடு மிளிர்ந்த
சாம்பல் நிற கண்கள், அந்த கண்களில் பெரிய தாபம் நிறைந்திருப்பதை
ஒற்றைக் கணத்திலேயே கண்டடைந்து விட்டாள். அவன் மீது இவ்வளவு ஈர்ப்பு உண்டாக காரணம் என்னவாயிருக்கும்
என தனக்குள் குழப்பிக் கொண்டிருந்தவள் தனிமை தான் அதற்கு காரணம் என கண்டறிந்தாள். தன் கணவன் மீது அவளுக்கு எப்போதும் அளவு கடந்த
காதலுண்டு.
அவள்
மீது அவருக்கும் கூட
இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அதீத மது பழக்கத்திற்கு அடிமையானவரால் முன்பை போல அவரால் உடலுறவில் ஈடுபட முடியவில்லை.
கடந்த ஐந்து வருடங்களாக உடலுறவு காணாத அவளது காமம் அவரது காதலை விட மிக சிறியது தான்
என அவள் அறிவாள்.
தன் கணவருக்கும் அவரால் தன்னை உடல் ரீதியாக திருப்திப்படுத்த இயலவில்லை என்ற
காரணத்தினால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் அவளுக்கு இருந்தது.
தன் மனைவியை உடல் ரீதியாக அணுக
முடியாத குற்ற உணர்ச்சி அவரைக் துன்புறுத்தியிருக்க
கூடும் அது அவரது சகல காதல் உணர்வைகளையும் சிதைத்திருக்கலாமா என்னவோ? இப்போது அவள் எதிர்பார்ப்பது தன்னை
குழந்தை போல் பார்த்துக் கொள்ள ஒரு அன்பு மட்டும் தானே தவிர வேற எதுவும் இல்லை.
மெர்சி பணிபுரிந்த இடத்திலெல்லாம் அவளுக்கு காதல் வலை வீச யாரும்
தயங்குவதில்லை. அவளது குழந்தை முகம் தழும்பும் சிரிப்பும், பேச்சும் எந்த ஒரு ஆணையும் கிறக்கி விடும். எத்தனையோ மருத்துவர்கள்
அவளை காதலிக்கிறேன் எனக்
கூறியிருக்கிறார்கள்.அவளோ தன் கணவனை தான் முழுமையாக நேசிக்கிறாள். அவன் மீது மட்டுமே அன்பை கொட்டி
தீர்த்தாள். அவனே தனது நேசிப்பிற்குரியவன்
என நினைத்தாள்.
மெர்சிக்கு பள்ளி படிக்கும் காலத்தில் ஒரு காதல் இருந்தது. தமிழரசன் என்ற பெயர் கொண்ட அவன், அவளின் வகுப்பிலேயே அழகானவனும் சிறந்த விளையாட்டு வீரனாகவும் இருந்தான், பார்த்ததும் பெண்களின் கண்களை நிறைக்கும் ஆணாக இருந்தான். ஆனால் அவனுக்கு மெர்சியை தான்
பிடித்திருந்தது, மெர்சியின் மீது காதலை பொழிந்தான். ஒரு குழந்தையை ஆராதிப்பதை போல் அவளை பார்த்துக் கொண்டான். அவள் செல்லும் இடங்களெல்லாம் இவனது கால் தடம் பதியாமல் இருக்காது. எப்போதும் அவளை பின் தொடர்ந்து கொண்டே இருப்பான்.
அவளது வீட்டில் மெர்சியின் தோழனாக தன்னை
அறிமுகப்படுத்திக்கொண்டவன் அவளுக்கு புல்லட் ஓட்ட கற்றுக் கொடுத்தான். பள்ளியின் இறுதி
காலத்தில் தமிழரசனின் குடும்பம் அந்த ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாகி போனது. அன்று போன தமிழரசனை மெர்சி
இன்றளவும் காதலிக்கிறாள். அவன் காதல் அத்தனை கவித்துவமானது. விடலை பருவத்தில் முளைக்கும் காதல் பெரும் கூர் தன்மையில்லாமல் இருந்தாலும்
கூட அந்த காதலில் பொய்மையில்லாமலிருந்தது.
அதற்கு பின் அவள் தமிழரசனை பார்க்கவில்லை. ஆனாலும் அவன் மீதான காதல்
குறைந்த பாடில்லை. தனக்கு தனிமை தாகம் துளிர்க்கும் போதெல்லாம்
அவன் முன்னே வந்து விடுவான். அவனது கள்ளங்கபடமில்ல சிரிப்பு அவளை என்னவோ செய்யும். தினசரி
ஒரு அரைமணி நேரம் கூட தன்
கணவர் தனக்காக செலவழிக்க மாட்டேன் என்கிறார் என்ற ஏக்கம் அவளை ஆட்கொள்ளும் போதெல்லாம் போர்வைக்குள் தன்னை புதைந்து கொண்ட அழுவாள்.
சிறுவயது முதலே கிறிஸ்தவ மதத்தின் போதனையால் சூழப்பட்ட
அவளது உலகம் எது நல்லது கெட்டது என அவளுக்கு உணர்த்தியிருந்தது. உண்மையை சொல்ல
வேண்டுமென்றால் அவளது தனிமைக்கு ஆற்று மருந்து இயேசு மட்டுமே. அடர்ந்த
முடியுடன் அவளது கனவில் தோன்றும் ஏசு மெர்சியின் அத்தனை சோகங்களையும் துடைக்க வல்லவர். பைபிள் வாசிப்பதும் பிராத்திப்பதும் தான் அவளது தினசரி பொழுது போக்கு. மனமடைந்து யாரேனும்
அவளிடம் பேசினால் கொஞ்ச
நேரத்தில் தன் ஆறுதல் மொழிகளால் அவர்களை ஆற்றுப்படுத்தி விடுவாள்.
மறுநாள் அவள் பெரியவர் எங்கு இருக்கிறார் என
விசாரித்து அங்கு பார்க்க சென்றாள். அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். மெர்சி அவர் அருகே சென்று தாத்தா என அழைத்தாள். கண் திறந்து பார்த்த பெரியவர் அவளை பார்த்ததும்
தன் கையை உயர்த்தி அவளது கையை நாடினார். மெர்சி தன் கையை அவரது கைகளில்
வைத்ததும் இறுக்கமாக பிடித்து கொண்டு புன்னகைத்தார்.
“கூட யாரும் இல்லையா?” என அவள் கேட்டுக் கொண்டே இருக்கும்போதே பெரியவர் அந்த பக்கமாக பார்த்தார்.
அன்று உதவி செய்த அதே இளைஞன் தான் அவனது கையில் இருந்த சாப்பாடு பொட்டலத்தை மெர்சி பார்த்தாள். அவனும் எதார்த்தமாக அவளை பார்த்து புன்னகை செய்தான்.
“யாரும் வரலையா?”
“இல்லைங்க அவங்க பையன் நேத்து வந்து பார்த்துட்டு போயிருக்காப்ல போல.. எனக்கு தான் ஒரே சங்கடமா இருந்துச்சு. அதான் பார்த்துட்டு
போலாம்னு வந்தேன். இங்க வந்து பார்த்தா மனுஷன பாத்துக்க கூட யாருமில்ல. சரி நம்ம தான் அனாதை கழுதை ஆச்சே இருந்து பாத்துக்குவோம்னு வந்தேன்”
பேசிக் கொண்டிருக்கும் போது, அவனது கண்கள் அவளை
நேருக்கு நேராக சந்திக்கவில்லை. அதற்குள் அளப்பரிய அச்சமும் நடுக்கமும் விரவிக் கிடந்தது. அந்த இளைஞனது பெயர் சரவணன் என்பதை மெர்சி மெதுவாக தான் தெரிந்து கொண்டாள். தினசரி பெரியவரை
பார்க்க வருவதும் சந்திப்பதுமாக இருவருக்குள்ளும்
ஒரு நட்பு உண்டானது. பெரியவர் உடல்
நலம் சரியாகி வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனாலும் கூட
எப்போதாவது வந்து அவளுக்காக மருத்துவமனை வாசலில் காத்திருப்பார்.
காய்கறிகள், தேங்காய் இப்படி
எதையாவது எங்கிருந்தேனும் எடுத்துக் கொண்டு வருவார். அவளும் எத்தனையோ முறை சொல்லி பார்த்து
விட்டாள் ஆனாலும் பெரியவர் கேட்க
மாட்டார்
“என் மகளுக்கு நான் செய்ய மாட்டனா தாயி” என்பார். மெர்சியால் அவரது அன்பின் வெளிப்பாட்டை தட்டி கழிக்கவும் முடியாது. கொடுப்பதை வாங்கி கொள்வாள்.
ஒரு
புறம் சரணவன் அவளை அக்கா அக்கா என்று அழைத்து கொண்டு பார்க்க வருவது அவளுக்கு சற்று
ஆறுதலாக இருந்தது. நாட்கள் நகர சரவணன் மெர்சிக்கு நல்ல தோழமையாகிவிட்டான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனோடு அமர்ந்து மணி கணக்கில் பேசிக் கொண்டிருப்பாள்.
சரவணனுக்கு பெற்றோர் இல்லை என்றாலும் உள்ளூரில் உறவினர்கள்
ஆதரவு உண்டு. மதுரையில் கல்லூரி படித்துக் கொண்டு, கிடைக்கும் வேலையை செய்து கொண்டு தனது மாமாவின் வீட்டில் தங்கியிருக்கிறான். இப்போதெல்லாம் மெர்சியின் அறையில் தான் பாதி
நேரம் இருக்கிறான். அந்த அறையில் உள்ள இன்னொரு பெண் கூட அவன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து கண்டுகொள்ளாமல் இருந்து விட்டாள். அவன் மெர்சிக்கு இஷ்டப்பட்ட மீன் குழம்பு செய்து கொடுத்து அவளிடம் பாராட்டு பெற்று
விடுவான்.
மெர்சி அவளது கணவனுக்கு கூட அவனை
அறிமுகப்படுத்தி இருக்கிறாள். மெர்சியின் குழந்தைகள் என்றால் அவனுக்கு அலாதி பிரியம். இரண்டொரு முறை அவர்கள் மதுரை வரும்போது குழந்தைகளுக்கு அவனை பிடித்து போயிற்று. மெர்சியின் தனிமை அவனால் நிரம்பியது அவனின் சிரிப்பும், ஆறுதலமான சொற்களும்
அவளை ஆற்றுப்படுத்தின.
அன்று மெர்சி விடுமுறை என்பதால் தன் அறையில் இருந்து வெளியே கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தாள். குளித்து
முடித்துவிட்டு அறையில் உடை மாற்றிக் கொண்டிருந்தாள். அப்போது எதர்ச்சையாக வந்த சரவணன் மெர்சி உடைமாற்றிக்
கொண்டிருப்பதை பார்த்துவிட்டு உடனே வெளியே சென்று
விட்டான். அவள் உடைமாற்றி வெளியே வந்ததும் அவனை பார்த்து
“எப்படா வந்த?”
“இப்பதான் கா”
“டேய் நான் பிரின்சி கூட படத்துக்கு போறேன் நீ வரியா?”
“இல்லக்கா நீங்க போயிட்டு வாங்க”
“டேய் ஏன்டா வெட்கப்படுற சும்மா வாடா”
அவனால் அதற்கு மேல் மறுப்பு கூற முடியவில்லை. எப்போதும் போல ஸ்கூட்டியில் இருவரும் போனார்கள். ஆனால் அவனால் அவளது
பின்னால் உட்கார முடியவில்லை. மனம் போட்டு குடைந்து கொண்டிருந்தது. அவனுக்குள் இருந்த அந்த காம உணர்வுகள்
கொடி போல் படர்ந்தன. அவன் அதனை அடக்க எத்தனிக்கும் போதெல்லாம் அது கொடிய விஷமாக மாறின.
தியேட்டரில் படம் ஒரு பக்கம் ஓடிக்
கொண்டிருந்தது தன் அருகில் அமர்ந்திருந்த மெர்சிவின் உடல் மனம் அவனை என்னமோ
செய்தது அவன் அடிக்கடி அவளது தலைமுடியில் இருந்து கிளம்பும் வாசத்தை உணர்ந்து கொண்டிருந்தான். அவன் மூளை
நரம்புகளில் மிருகங்கள் ஓடின.
சரவணன் மெல்ல மெர்சியின் கழுத்தோரமாய் முகத்தை
நகர்த்தி தனது வெப்பமான மூச்சு காற்று வீசும்படி அவளை நுகர்ந்தான், மெர்ச்சிக்கு என்னவோ இருந்தது. முதலில் அவள் இதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. திடீரென
மெர்சியின் கழுத்தில் அவனது உதட்டின் வருடல்கள் அவளை கூச செய்தன. பளார் என ஒரு அறை சரவணனின் கன்னத்தில் விழுந்தது. அவனுக்கு
ஒன்றும் புரியவில்லை. மெர்சி கோபமாக அங்கிருந்து சென்றாள். அவளது தோழி அவனை முறைத்து பார்த்துக்
கொண்டே பின் தொடர்ந்தாள்.
ஆனால் அவள் கடைசி வரை அவனை கண்டு கொள்ளவே இல்லை அவன்
உணர்ச்சிவசத்தில் தான் அதை செய்திருப்பான் என மெர்சிவிற்கு தெரிந்திருந்தாலும் அது
இப்படியே தொடர்ந்தால்
தவறாகத்தான் முடியும் என மெர்சி நினைத்திருக்கலாம். கொஞ்ச
நாட்களில் மெர்சியை தேடி வருவதையே நிறுத்திக் கொண்டான்.
மெர்சியும் ஊட்டிக்கு மாற்றலாகி
சென்று விட்டாள். புது ஊர், புது மனிதர்கள் மதுரைக்கு நேர்மாறான தட்ப வெப்ப நிலை இவை எல்லாமே அவளுக்கு
பெரும் நிம்மதியை கொடுத்தன. எப்போதும் போல தனிமை அவளை தொந்தரவு
செய்து கொண்டிருந்தாலும் அவள் செய்யும் செவிலியர் பணி அதனை மறக்க வைத்திருந்தது.
திடீரென ஒரு நாள் மெர்சியின் போனுக்கு வாட்சாப்பில் சில புகைப்படங்கள்
வந்திருந்தது. அவளது தோழி பிரின்சி
அனுப்பிய புகைப்படங்களோடு கூடவே ஒரு செய்தியும் பகிரப்பட்டு இருந்தது. அவள் முதலில் செய்தியின் தலைப்பை பார்த்தாள். ‘மது போதையின் உச்சத்தில் லாரியில் நேருக்கு நேர் மோதிய இளைஞர் பலி’ என எழுதி இருந்தது.
ஒரு பக்கம் முகம் பாதி சிதைந்த நிலையில்
பாதி முகத்தில் அது சரவணன் என தெரிந்தது. போனை நடுக்கத்தில் கீழே
போட்டவள் அப்படியே உட்கார்ந்து அழத்துவங்கினாள். அவளது வார்டில் இருந்த குழந்தை நோயாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என்னவென்று
தெரியாமல் குழம்பி போய் பார்த்தனர். மெர்சி தன்னை கால்களுக்குள் புதைத்துக்
கொண்டு அழுது கொண்டே இருந்தாள்.
மெர்சியின் மனதில் எண்ணங்கள்
ரிங்காரமிட்டன. எல்லா ஆண்களை போல் அவன் தன்
மீது மோகம் கொண்டிருந்தாலும் அவன் அவள் மீது அதீத காதல் கொண்டிருந்தான். எப்போதாவது மெர்சி சரவணனை பற்றி நினைக்கையில் அவளுக்கு ஒற்றை கவலை மட்டும் தான் இருந்தது. கடைசி வரை அவன் என் மன்னிப்பை பெற முடியாதவனாகி விட்டானே என்பது தான் அது. அந்த ஒற்றை குற்ற உணர்ச்சி மட்டும்தான் இனி அவளது ஆயுட்காலம் முழுதும் நீள போகிறது.
-சிபி சரவணன்
போன்:6379165176
கருத்துகள்
கருத்துரையிடுக