அடுக்குமாடி
குடியிருப்புகளை உரசிய வெயில் காலையை அறிமுகப்படுத்தியது. சித்தனின் கால்கள்
வெயிலை உணர்ந்திருக்க கூடும் அதன் மனதை
ஒளியூட்டும் பிரபஞ்சத்தை ஓட விட்டுப் பார்த்தான்.
வெளியே மக்கும் குப்பை
மக்கா குப்பை என பாடல் ஒலிக்க எப்போதும்
போல இன்றும் அவன் சுகாதார துறையால் விழித்தான். தினமும் அந்த பாடலை கேட்டு கேட்டு மனம்
பழக்கமாகிவிட்டது. அவனது அறை கொஞ்சம் வசதியான அறை
தான் என்றாலும் கூட சுத்தத்தைப் பற்றி என்னவென கேட்கும் நிலையில் தான்
வைத்திருந்தான். சோம்பலை முறித்தவன் எழுந்து பல் துலக்கிக் கொண்டே
ஜன்னல் திரைகளை விளக்கிப்
பார்த்தான்.
வாகனங்கள் அவசர கதியில் ஊர்ந்து கொண்டிருந்தன. முன்னாள் செல்லும்
வண்டி போக வழி இல்லாமல் நின்றிருந்தாலும்,ஹாரன் ஓசை மட்டும் ஓயவில்லை. இந்த மனிதர்களுக்கு பித்து பிடித்து விட்டதோ
என்னமோ என நினைத்துக் கொண்டான்.
கொரோனா காலம் முதலே அவன் வீட்டில் இருந்த படி தான் வேலை செய்கிறான். சொந்த ஊருக்கு சென்று அங்கேயே போய் தங்கி வேலை செய்யலாம் என்ற நிலை இருந்தாலும் கூட அங்கு அவனுக்கு சுதந்திரமாக இருக்க முடியாதென சென்னையிலுள்ள தனது அறையில் தங்கியிருக்கிறான். இங்கு அவன் இஷ்டம் போல குடிக்கலாம், புகை பிடிக்கலாம், தோன்றிய இடத்திற்கு பயணம் செய்யலாம். இதனால் அவன் ஊருக்கு செல்லாமல் முன்னர் தங்கி இருந்த அறையிலே தங்கி விட்டான். அவனோடு தங்கியிருந்த மூவரும் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். சிலர் சொந்த ஊருக்கு போய் விட்டனர் ஆனால் இவனும் இந்த அறையே கதி என கிடக்கிறான். வானில் இருள் படிந்த பின்பே அவன் வெளியே செல்வான் மற்றப்படி பகல் முழுதும் அவனுக்கு அந்த அறை தான். ஒல்லியும் குண்டுமென சொல்லிவிட முடியாத அளவிற்கு ஒரு கொல கொல உடம்பு தான் அவனுக்கு. பிஸ்கட் நிறத்தில் அடர்ந்த தாடியும் கூழாங்கல்லை போல் மின்னொளி ஊட்டும் கண்களும் அவனுக்குண்டு. வயது 28யை நெருங்கி விட்டால் பார்ப்பதற்கு 22 வயதினைப் போல் அவன் தோற்றமளிக்க அவனது பளபளக்கும் கொழுத்த கன்னங்களும் ஒரு காரணம். அதிகமாக கரை வைத்த ஒத்தை வெட்டியும், கலர் கலராக டி-ஷர்ட்களை போட்டுக் கொண்டே சுற்றுவான். வேலையென வந்து விட்டால் நல்ல பார்மட் சட்டையை அணிந்து கொண்டு கீழே வெட்டி வேட்டியை கட்டிக்கொண்டு உட்கார்ந்து விடுவது தான்.
அடுக்குமாடிக்குடியிருப்பில் மொத்தம் ஏழு வீடுகள் உண்டு. அதில் இரண்டாம் தளத்தில் தான் சித்தன் தங்கியிருக்கிறான். இந்த வீட்டிற்கு நேர் எதிரில் இன்னொரு வீடு இருக்கிறது. அவனுக்கு யாரைப் பற்றியும் தெரிந்து வைத்து கொண்டதில்லை. வாடகை காசு கொடுப்பதோடு சரி ஒருவர் முகத்தையும் பார்த்து கூட பேச மாட்டான். வெளியே செல்லும் போது போனை நோண்டிக்கொண்டேசெல்வான். அவன் கிட்டதட்ட டிஜிட்டல் உலகத்தின் மாயையால் விழுங்கப்பட்டிருந்தான். இப்படி ஒரு நாள் அங்கே தங்கி இருக்கிறான் என்பது பற்றி அப்பார்ட்மெண்டில் யாருக்கும் பெரிதாய் தெரியாது. அன்று இரவு எப்போதும் போல் 11 மணிக்கு மொட்டை மாடிக்கு சென்றான். இது அவனது அன்றாட பொழுதுபோக்கு மொட்டை மாடியில் நின்று புகை பிடித்து விட்டு கொஞ்ச நேரம் பாட்டு கேட்கையில் அவனது கண்கள் குளிர்ச்சி அடைவதாக உணர்கிறான். இருளை கிழித்து முளைக்கும் ஒவ்வொரு வெளிச்சமும் புது புது பிரகாசத்தை கொடுத்து நகரை ஓவிய மையம் ஆக்கியது.அன்று தென்னங்கீற்றின் வருடலுக்கு இதமாக பாட்டு கேட்டுக் கொண்டே சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.அப்பொழுது ஏதோ சிணுங்கல் குரல் கேட்டதும் கண்டிப்பாக ஏதோ ஒரு பெண் அழுது கொண்டிருக்க வேண்டும் என நினைத்தவன் குரல் வரும் திசையை நோக்கி நடந்தான். மூளையில் ஒரு பெண் கண்ணீரை துடைத்துக்கொண்டே அங்கிருந்து எழுந்து கீழே நடந்து சென்றாள். இவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவளை பின்தொடர்ந்து சென்றவன் வெளிச்சத்திற்கு வந்ததும் அது தனது எதிர் வீட்டுக்கு பெண் என தெரிந்து கொண்டான். அவள் வேகமாக நடந்து சென்று கதவை தாழ்த்திக் கொண்டால் இவனுக்கும் ஒன்றும் புரியவில்லை .
இத்தனை நாள் கண்காணிப்பில் அவரிடம் மொத்தம் ஆறு நைட்டிகள் இருப்பதை கண்டறிந்து விட்டான். எல்லா நைட்டிகளும் ஒரே பூ போட்ட டிசைன் தான் என்றாலும் கூட வண்ணங்கள் வேறு. இத்தனை வருடத்தில் அவளை அவன் வேறு உடையில் பார்த்ததில்லை ஒருவேளை அவன் கவனிக்காமல் கூட இருந்திருக்கலாம். கழுத்தில் சின்னதாக தங்க சங்கிலியும், அழுக்கு படிந்த தாலிக் கயிறும் அணிந்திருந்தாள். அவளது காதோரம் முடிகள் அடர்த்தியாக இருப்பதாலும் மாநிறமான அவளது முகத்தை அழகாக தூக்கி காட்டியது. அவளது கைகளில் கதிர்களை போல் சாய்ந்திருக்கும் மென்மையான ரோமங்கள் ஒரு மாதிரி பார்க்க கவர்ச்சியாக இருந்தன. சித்தனுக்கு அவளது பின்னழகை ரசிக்க கூட ஆசைதான் ஆனால் அவள் எப்போதும் லூசான நைட்டிகளை அணிகிறாள்.
அவனுக்கு தெரிந்து இரண்டு
வருடமாக அந்த தம்பதிகள் இங்கே தங்கி இருக்கிறார்கள். அப்பாட்மெண்டில் யாரோடும் நின்று அவள்
பேசிக் கொண்டிருந்ததை அவன் பார்த்ததில்லை. கணவன் பெல் அடித்தால் கதவு
திறக்கிறாள் தேவை என்றால் வெளியே வருகிறாள். அவள் எப்போதும் பிரகாசமான
கொண்டவளாய் இருந்ததே இல்லை. அந்த முகத்தில்
எப்போதும் ஏதோ இருண்மை படிந்திருக்கும். முழுதாய் சிரித்து கூட அவன் பார்த்ததில்லை. கொஞ்ச நாளாய் சித்தன்
தன்னை கவனிக்கிறான் என்பதை அவள் உணர்ந்திருக்க வேண்டும். கதவினை திறக்கும்
போதெல்லாம் அவனது அறை கதவை பார்க்கிறான். குப்பை போட போகும்போதெல்லாம் அவன்
காலடியில் ஓசியில் அவள் நடையின் வேகங்களை கூடுகின்றன. குப்பை கொட்டும்
சமயத்தில் அந்த கருவிழியை மட்டும் சுழித்து எங்கோ பார்ப்பது போல் அவனை பார்க்கிறாள். ஆனால் அது ஒன்றும் அந்த
மாதிரியான பார்வையில்லை. பெண்களுக்கே உரித்தான
தன்னை தற்காத்துக் கொள்ள எத்தனிக்கும் பார்வை அதில் துளியும் காதலில்லை. அவளுக்கு சித்தன் மீது துளியும்
ஈர்ப்பில்லை. ஏதோ ஒன்று தவறாக நடக்கப் போகிறது என்ற அச்சம் தான்
இருந்தது. அந்த அச்சத்தில் கூட கொஞ்சமாக சந்தோஷம்
கலந்திருக்கலாம் என அவனுக்கு தோன்றியது.
அவளது கணவனை பொறுத்தவரை ஒரு இயந்திரத்தன்மை உள்ள மனிதன் என்று தான் சொல்ல வேண்டும். காலையில் பரபரப்பாக கிளம்பும்போது யாரும் எதிரே மனிதர்கள் தென்பட்டாலோ சிரிப்பது கூட இல்லை. அவரது சிரிப்பை யாரும் இதுவரை கண்டு கொண்டதில்லை. அவருக்கு எப்போதும் எனது வீட்டின் மீது முறைத்த பார்வை இருக்கும். சித்தனது அறை நண்பர்கள் யாரேனும் தென்பட்டால் முறைத்துக் கொண்டே போவான். தினமும் காலையில் வண்டியை அழகாக துடைத்து கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து லேசாக சிரிப்பான். அது மட்டும் தான் அன்றைய நாளின் அவனது முழு சிரிப்பாக இருக்கும் அதை மட்டும் தான் சித்தனும் பார்த்திருக்கிறான். மற்றபடி சரியான ஆள் எனவும் சொல்லிவிட முடியாது குடிப்பழக்கம் புகைப்பழக்கம் இது போன்ற எதுவும் அவனுக்கு கண்ணுக்கு தட்டுபடவில்லை. சில சமயம் சித்தனுக்கு தோன்றும் ஏதேனும் ஒன்றுக்கு அடிமையாக இல்லாதவன் தனக்கு உண்டாகும் மன அழுத்தம் முழுவதையும் பொண்டாட்டி மீது எறிவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறான்.
நாட்கள் செல்ல செல்ல அவன் சிந்தனை முன் தூக்கி பார்க்க ஆரம்பித்து விட்டால் அவனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும் ஏதோ ஒரு வித சந்தோசம் இருந்தது. அவள் கண்கள் கொஞ்சம் குளுமையாக அவனை பார்ப்பது போல அவனுக்கு தோன்றும். ஆனாலும் அவளிடம் அந்த அச்சம் மட்டும் எப்போதும் போல் அப்படியே இருந்தது. எப்போதும் போல் நாட்கள் அப்படியே போய்க் கொண்டிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவனுக்கு அவள் மீது சலிப்புத்தட்ட ஆரம்பித்தது. இதனை பார்த்துக்கொண்டே இருந்தால் நமக்கு என்ன கிடைத்த விட போகிறது என அவளை கண்காணிப்பதை நிறுத்தி விட்டான்.
நாட்கள் இப்படியே ஓடின
ஒரு நாள் எதார்த்தமாக இருவரும் முகம் பார்த்துக் கொள்ளும்படியான சந்திப்பு
படிக்கட்டில் நிகழ்ந்தது. அவளோ யாரோ வேற்று ஆளை பார்ப்பது போல் தன்
பார்வையை மடித்து தனக்குள் ஒளித்து கொண்டு சென்று விட்டாள்.
சென்னையில் வெயில் உக்கிரமாக கொளுத்திக் கொண்டிருந்த நேரம் மட்ட மத்தியானத்தில் சித்தன் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். பசியில் வயிற்றை லேசாக கிண்ட ஆரம்பித்தது. ஆனால் எழுந்து போய் சாப்பிட்டு வர சோம்பேறித்தனம் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து பார்த்தான். பின்னர் லேப்டாப்பை படுக்கையில் வைத்து விட்டு எழுந்து சென்று கதவை திறந்தான்.கதவருகே மிக நெருக்கமாக அவள் அவளேதான். அதை பூப்போட்ட நைட்டி ஆனால் முகத்தில் மிகப்பெரிய அச்சம் படிந்திருந்தது. அவளது மார்பு ஏறி, ஏறி இறங்கியது. மிகவும் பதற்றத்தில் இருக்கிறாள் என அவனுக்கு தோன்றியது. எவ்வளவு நேரமாக இங்கே நிற்கிறார்களோ? அல்லது இப்போதுதான் வந்தாளோ என்றெல்லாம் அவனுக்கு கேள்விகள் எழுந்தன. அவன் தனது அறை வாசலின் வெளியே இரண்டு பக்கமும் பதட்டமாக பார்த்துக்கொண்டே பின்னர் உள்ளே செல்ல வழி விட்டான். அவள் நேராக சென்று ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். பதட்டத்தில் அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
”அன்னைக்கு ஏன் அழுதுட்டு இருந்தீங்க?” சித்தன் தான் துவங்கி வைத்தான்.
அவள் கிளாசை அவனிடம் கொடுத்துவிட்டு
மீண்டும் அறையை சுற்றிப் பார்த்தாள். எதுவும் பேசத் தோணவில்லையோ என்னமோ விறுவிறுவென்று கதவை திறந்து கொண்டு சென்று
விட்டாள். சித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை
“ஒருவேளை தனிமையில் இருப்பதால் எதையும் பார்த்து பயந்து இருப்பாலோ? தம் உதவி ஏதும் கேட்டு வந்தாலோ தயக்கத்தில் பின் எதுவும் பேசாமல் சென்று விட்டாள்” என்ன பல குழப்பத்தில் இருந்தான்.
அதற்குப் பின்ன அவளை அவன் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினான். கதவு திறக்கும் சத்தம் கேட்கும் போதெல்லாம் கதவு ஓட்டை வழியாக அவளை பார்ப்பான். குப்பை போட போகும்போது அவளை பின் தொடர்ந்து செல்வான். முன்பு போல் அவள் நேருக்கு நேராக அவனை பார்ப்பதில்லை. இவனுக்கும் ஒன்றும் புரியவில்லை தலையை வெடித்து விடும் போல இருந்தது என்னதான் பிரச்சனை ஏன் இவள் பிரமை பிடித்தவள் போல் இருக்கிறாள். இதனால் அவரிடம் தைரியமாக பேச முடியவில்லை அவளை பார்த்தாலே இவனுக்கு மனம் ஓட்டம் இறந்து விடுகிறது. பிணமாக அவள் முன் நிற்கிறான் சொற்களை அவனால் பொருத்தி எதுவும் பேச முடியவில்லை. இனிமேல் அவளிடம் பேசி பயனில்லை நேரடியாக அவள் கணவரிடமே பேசி விடலாம் என திட்டமிட்டான். மறுநாள் காலையில் கார் பார்க்கிங்கள் வண்டி துடைத்துக் கொண்டிருந்த கணவனிடம் பல்துலக்கி கொண்டே லேசாக பேச்சு கொடுத்தான். அவனை பார்த்த அவர் பொய்யாக சிரித்தார்.
“ அப்பார்ட்மெண்ட் மெயின்டனன்ஸ் சார்ஜ் ஏத்திட்டாங்க போலயே?”
”ஆமாப்பா இவங்களுக்கு இதே பொழப்பு இத்துப்போன பில்டிங்க்கு எம்புட்டு தான் காசு தரது, உழைச்சு உழைச்சு ஓடா போனது தான் மிச்சம்” என வாழ்க்கையை பலகோடி ஆண்டுகள் வாழ்ந்து சலித்தவர் போல் பேசினார். இதற்கு மேல் அவரிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை கேட்டாலும் நீலப் பிரசங்கம் தான் செய்வார் என அவனுக்கு தோன்றியது. ஆனால் அவரை பார்த்தால் உடலளவில் கட்டுமஸ்தான உடல்தான் கவர்ச்சியூட்டும் முகம் தான் என்றாலும் கூட பேச ஆரம்பித்தால் சலிப்பு அருவியாக கொட்டுகிறது.சித்தன் இனி இவர்களைப் பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது என்ற மனநிலைக்கு வந்து விட்டான். ஒருநாள் மாலை வேளையில் கம்ப்யூட்டர் திரையை பார்த்து எரிச்சலான கண்ணை கொஞ்சம் அமைதி படுத்தலாம் என காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு மாடிப்படிக்குவந்தான் அங்கே அவள் துணியை காய போட்டுக் கொண்டிருந்தாள். அவன் கண்டுகொள்ளாதது போல் சிகரட்டை எடுத்து பற்ற வைத்து அடிக்க ஆரம்பித்தான். பேசலாம் என அவனுக்கு தோன்றினாலும் அவனுக்குள் பயம் இருந்தது.
“ லாஸ்ட் டைம் கிளிப் சரியா போடாம போயிட்டீங்க. உங்க நைட்டி கூட அந்த பக்கமா போய் விழுந்துருச்சு” என்றான்.
அவள் துணியை காய போட்டுக் கொண்டே ”அதாச்சும் இஷ்டத்துக்கு பறந்து போகட்டும்” என முனங்கினாள்.
”அன்னைக்கு ஏன் அழுதீங்க ஏதும் ஹெல்ப் பண்ணனுமா” என முடங்கி கொண்டே கேட்டான்.
“ எனக்கு ஏதோ பெட்டிக்குள்ள அடைந்து கிடக்கிற மாதிரி இருக்கு. மூச்சு விட்டாலும் இழுக்கிற மூச்சு ஏன் மூச்சு காத்து மாதிரியே இருக்கு, ஊருக்கு போகணும் பேச யாராவது இருந்தா நல்லா இருக்கும், டிவி சீரியல் கேட்கிற சக்தி இருந்தா நான் சொல்றதெல்லாம் கேக்கும். இல்ல எனக்கு பைத்தியம் பிடிக்குது ஏதோ மிருகம் வருது போகுது, அதுக்கு வேணுங்கறத எடுத்துக்குது, எனக்கு என்ன வேணும்னு கேக்குறது இல்ல, அதான் யார்கிட்டயும் சொல்லனும் போல இருந்துச்சு அம்மா கிட்ட சொன்னா கல்யாண வாழ்க்கை அப்படித்தான் பழகிருங்கடா, எனக்கு புரியல பழகி பழகி தான் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு, அதான் அன்னைக்கு சும்மா உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்.” சரிந்த சரளி கற்கள் அவளுக்குள்ளிருந்து சொற்கள் மடமடவனு விழுந்தன. அவள் பேச்சில் கொஞ்சம் ஈரம் படிந்து இருந்தது.
“அப்பார்ட்மெண்ட்ல யாரும் பிரண்ட்ஸ் இல்லையா?”
“பொம்பளைங்களுக்கு முதலில் பொம்பள தான எதிரி. அவங்க கதையை நானும் என் கதை அவங்களும் பேசித்தானா மனச தேத்த முடியும்”
” நீங்க இவ்ளோ பேசுவீங்களா” என்ன கேட்டதற்கு அவள் சிரித்தாள். அப்போதுதான் அவள் முகம் பிரகாசமாக ஜெபித்தது. பின்னர் சளியை உள் இழுத்துக் கொண்டே அங்கிருந்த வாலியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
”அப்படி என்ன பிரச்சனையா இருக்கும் என சித்தனுக்கு பெரிய குழப்பம். இப்படி தீப்பொறி போல் வெடித்துவிட்டு போகும் அவளுக்கு உண்மையில் என்னதான் பிரச்சனை” அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
கீழே சென்றால் அவளது வீடு அடைத்து இருந்தது. கதவை தட்டலாம் என அவனுக்கு தோன்றியது. ஆனால் பதட்டம் உண்டாகவே தன் அறைக்கு சென்று தாழ்த்தி கொண்டான். அன்று இரவெல்லாம் அவள் சொன்ன சொற்களை புரட்டி புரட்டி யோசித்தான். கடைசியில் தனிமை தான் அவளது பிரச்சனை என அவனுக்கு புரிந்தது.அவனால் இந்த தனிமையின் ரணத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் தானும் தனியாகத்தான் இருக்கிறேன் அவளுக்கு மட்டும் அப்படி என்ன நடந்தது என்று நினைத்துக் கொண்டான். இருக்கலாம் புதிதான ஒரு வீடு, புதிய மனிதர்கள், புதிய உறவு அவரை மட்டுமே நம்பி வாழும் வாழ்க்கை என்ற அழுத்தம் எல்லாம் சேர்ந்து அவளுக்கு அப்படி தோன்ற வைத்திருக்கலாம், எல்லாம் ஒரு குழந்தை வந்தால் சரியாகிடும் என நினைத்துக் கொண்டான்.
மறுநாள்
காலையில் எதிர் வீட்டில் பயங்கரமான சத்தம் கேட்டது இருவருக்கும் பெரிய வாக்குவாதம்
நடந்து கொண்டிருந்தது. அவனுக்கு வெளியே சென்று பார்க்க மனம்
வரவில்லை அவர்களது பிரச்சினையில் நாம் எதற்கு என தோன்றியிருக்க வேண்டும். ஆனால் தன் அறையை திறந்து என்னதான் நடக்கிறது
பேசிக்கொள்கிறார்கள் என கேட்கலாம் என சித்தனுக்கு தோன்றியது. கணவனது குரல் எழும் போதெல்லாம் ”தேவிடியா” என்ற வார்த்தை அடிக்கடி வந்து கொண்டே
இருந்தது. அவளும் பதிலுக்கு பதில் திட்டிக் கொண்டிருந்தாள் ”உன்ன நம்பி.. உன்ன நம்பி..” என்ற வார்த்தையை மட்டும்
அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருந்தாள். அவர் ”போடி தேவிடியா முண்ட” என திட்டிக்கொண்டே இருந்தது
கேட்டது. என்ன பிரச்சனை என சரியாக விளங்கவில்லை அப்பார்ட்மெண்ட் யாருடைய வீட்டு பிரச்சனையும் யாரும்
தலையிடுவதில்லை. வாட்ச்மேன் மட்டும் அவ்வப்போது வந்து
படியில் நின்று எட்டிப் பார்த்துவிட்டு போனான். ஒரு வீட்டிலிருந்து கதவு திறக்கப்படவில்லை கொஞ்ச நேரத்தில் சித்தனுக்கும் அங்கே நிற்க சங்கடமாக இருந்தது. அவனும் கதவை காலை விட்டுக் கொண்டு பெட்டில்
படுத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் பாத்திரம் ஒன்று பலமாக தரையில் விழும் சத்தம் கேட்டது. அவனுக்கு எழுந்து போய் பார்க்க
மனம் இருந்தாலும் மற்றவர்கள் பிரச்சனையை நாம் எதற்கு தலையிட வேண்டுமென எல்லா சாதாரண மனிதர்கள்
போல் அவனும் இருந்து கொண்டான். சிறிது நேரத்தில் கதவு திறக்கும்
சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்த
சித்தனுக்கு அதிர்ச்சி அவள் சுடிதார் அணிந்து இருந்தாள். இத்தனை நாள் அவன் பார்த்த அவளாக
அவள் இல்லை என் அவனுக்கு தோன்றியது அவள் அவனை நேருக்கு நேராக திமிராய் ஒரு பார்வை
பார்த்துவிட்டு அங்கிருந்து படியை நோக்கி நடந்தாள். அவளது கையில் சிறிய துணிப்பை
வைத்திருந்தாள். சித்தனுக்கு என்ன நடக்கிறது என புரியவில்லை. காலில் தொடுவதை போல் இருக்கிறது ஆனால் அவன்
குனிந்து பார்த்தான் அவனது பாதங்களை செங்குருதி வருடிக் கொண்டிருந்தது.
-சிபி சரவணன்
போன்:6379165176
நன் உங்க சுடும் ரத்தம் சிறுகதைப் படித்தேன், அருமையக இருந்தது. பெண்களின் மனச்சிக்கல்கள் மற்றும் மன அழுத்தகங்கள் எந்த அளவுக்கு இட்டுச்செல்லும் என உணரமுடிகிரது "அவன் கிட்டதட்ட டிஜிட்டல் உலகத்தின் மாயையால் விழுங்கப்பட்டிருந்தான்" எனக்கு மிகவும் பிடித்தது.
பதிலளிநீக்கு