கம்பமெட்டு மலைகளில் சுருள் சுருளாக உள்ள சாலையில் பயணிப்பது ஒரு சுகானந்த அனுபவம். அதுவும் வாழ்வின் பெரும்பகுதியை நகரத்தில் கழிக்கும் என்னை போன்ற நகரத்து வாசிக்கு மலைகள் எப்போதும் புத்துயிர்ப்பை தரக்கூடியவை.
நீண்ட கால நண்பர் ஒருவருக்கு கல்யாணம். அதுவும் மேற்கு தொடர்ச்சி மலைகள் கூடும் இடத்தில் அமைந்துள்ள அழகான வீட்டில் தான் எளிமையாக கல்யாணம் நடக்க போகிறது. நகரத்தில் எங்களோடு அவர் பணிபுரிந்தாலும் அவர் பக்கா கிராமத்து காரர் என அடிக்கடி அவரது சொல்லாடல்கள் காட்டி கொடுத்து விடும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அதாவது கம்பம் பகுதியில் இருந்து ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவாக மலையில் ஏறுவதே ஒரு பேரனுபவத்தை தந்தது. எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பேரும், அதே ஊரை மற்ற இரண்டு நண்பர்கள் உதவியால் ஜீப்பில் அழைத்து செல்லப் பட்டோம். அதில் எத்து பல்லும் , நரைத்த முடியும் கொண்ட நல்லாண்டி தோன தொன வென பேசிக் கொண்டே வந்தார். ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் பீடியை இழுத்து புகையை ஊதி கொண்டே வந்தார். அவர்கள் எங்களை கம்பத்தில் ஏற்றிய முதலே அவர்கள் முகத்தில் ஒரு பேரானந்தம் விரவி கிடந்தது. மற்றொரு நபர் எதுவும் பேசாமல் அவ்வப்போது கண்ணாடியில் எங்களை பார்த்து கொண்டே வந்தார். நாங்கள் அணிந்த உடை , எங்கள் உபகரணங்களை பார்த்து அவர் சற்று பொறாமை படுவது போல் தோன்றியது. எங்கள் நண்பர் "கா"வுக்கு முப்பதை தொட்டு விட்டது. இப்போது தான் மலை காட்டில் ஒரு பெண் அவரை திருமணம் செய்ய ஒத்து கொண்டிருக்கிறார். பாவம் பாதி வழுக்கையில் கா மிகவும் மனதளவில் தைரியமான ஆளாக தெரியவில்லை.
என்னோடு வந்த நண்பர் "மா"வுக்கு இந்த பயணம் ஒரு மாதிரி உவர்பாகவே இருந்தது. மலை மீது ஜீப் ஏறும் போதெல்லாம் அவர் தலை சுற்றுவதாகவும் வாந்தி வருவதாகவும் புலம்பி கொண்டே இருந்தார்.
அதனை கவனித்த மிஸ்டர் நல்லாண்டி
"நே... ஒண்ணுமில்ல .. காத்தாட தலைய வெளிய விட்டுட்டு வாங்க ஒன்னும் செய்யாது. மேலே ஏறினதும் நம்ம மேரி சேச்சி கடையில சோடா வாங்கி தாரேன். அப்பறம் மண்ட கணம் சரியாகிடும்"
என கூறி முடிக்கும் முன் மிஸ்டர் "மா" குபு குபுவென வாந்தியை எடுத்தார். வண்டியை ஓரமாக நிறுத்தி பின்னால் வந்து பார்த்த நல்லான்டி
"சை... என்ன இப்படி வாந்தி எடுத்து ஓலப்பி வச்சிருகிக.. சொல்லிருந்தா நானே வண்டியை நிப்பாட்டி இருப்பென்ல.."
மிஸ்டர் மாவுக்கு நல்லாண்டியின் குரலில் இருந்த கோபம் பய உணர்வை தந்தது. அவர் கிழே இறங்கி வாயை கொப்பளித்து விட்டு மீண்டும் ஏறி கொண்டார்.
வண்டி செக் போஷ்டை நெருங்கியதும் காது அடைப்பு விலகுவது போல் ஒரு உணர்வு தோன்றியது. மேலும் ஏல செடிகளில் இருந்து கிளர்ந்து வந்த மணம் என்னை கிளர்ச்சி அடைய செய்தது.
இடுக்கி மாவட்டத்தில் வண்டமேடு என்ற சிறிய நகரத்தில் தான் காவின் வீடு. போனதும் கடுந்தேயிலை டீயில் எங்களை மயங்கி விட்டார்கள். அதற்கு முன்பாக அவர்கள் கொடுத்த பழம்பூரி அந்த பயணத்தை இன்னும் இனிமையாக்கியது. நண்பர் கா பார்ப்பதற்கு புது மாப்பிள்ளை போல் இல்லாமல் சாதாரண வேலைக்காரன் போல் கல்யாண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
" சார் ஜீப் சாவரி எல்லாம் எப்டி இருந்துச்சு?"
"பரவால்ல சார்.. நம்ம மா தா வாந்தி எடுத்து தள்ளிடாப்புல"
"புதுசுல சார் அப்டி தான் இருக்கும். சுடுதண்ணி வச்சிருக்கேன்.. பல்லு வெலகிட்டு குளிச்சுட்டு வாங்க.. சாப்பிடுவோம்"
தெரியாமல் பச்சை தண்ணிரில் வாய் கொப்பளித்து விட்டேன். பழைய பல் வலி மீண்டும் உதித்து கொண்டது.
அந்த சிறிய வீட்டில் கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் படு மும்பரமாக நடந்து கொண்டே இருந்தன. நாங்கள் காலை உணவை முடித்து சுற்றி பார்க்க தயாரானோம். பயணத்தின் மேல் பெரிதும் விருப்பம் இல்லாத மாவிற்கு ஏண்டா இங்கே வந்தோம் என்ற உணர்வே மேலோங்கியது. ஆனால் எனக்கு அப்படி இல்லை. எங்கு பார்த்தாலும் பசுமை விரிந்த நிலப்பரப்பு. கண்கள் நிறைய அவற்றை ரசித்து கொண்டே இருந்தேன். அன்று மதியம் வரை நல்லாண்டி நடையாகவே எங்களை ஊர் சுற்றி காட்ட கூப்பிட்டு போனார். போதும்டா என்பது போல் மூச்சு இரைக்க உட்கார்ந்த மா விற்கு திடீரென ஞான உதயம் வந்தது.
" ஏப்பா.. இங்க கள்ளு கடை எதும் பக்கத்துல இருக்கா?"
"இருக்கு நா"
நல்லாண்டி பொட்டு சிரிப்பு சிரித்து கொண்டே எங்களை பார்த்து போகலாமா என்பது போல் தலையை அசைத்தார்.
சிறிய வீடு போன்ற அமைப்பு கொண்ட அந்த கடையின் பின்புறமாக அழகான மரங்களுக்கு இடையே டீ கடை நாற்காலிகள் போட பட்டிருந்தன. நாங்கள் இருவரும் ஒரு இடமாக பார்த்து அமர்ந்தோம். எங்களை கவனித்த நல்லாண்டி
"இங்க எதுக்கு உக்காந்திங்க.. இங்க சேர் ஆடி கிட்டே இருக்குமே.."
என்றவாறு கட்டை ஒன்றை எடுத்து வைத்தார். கடையின் சப்ளையர் யார் இவர்கள் என்பது போலவும், இவர்கள் ஏன் இந்த எத்து பல்லன் உடன் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பது போல பார்த்தார்.
" என்ன அலியா.. என்ன பார்வ.. எல்லாம் நம்ம தோஷ்த்துங்க தான். நீ மாத்திரை போடாம நல்ல தென்னங் கள்ளு கொண்டா.."
பின்னர் எல்லோரும் எங்களுக்கு விருப்பமான மாமிசத்தை வாங்கி கொண்டோம். பீப் கறி, பன்றி இறைச்சி, மீன் என அருமையான அசைவ உணவு. நல்ல அசைவம் அதிகம் எடுத்து கொள்வதற்காகவே இங்கே வரலாம். நாவை வேட்டையாடும் அததனை ருசியும் அதனில் இருந்தது.
கள்ளு கொஞ்சம் புளிப்பு சுவை கூடுதலாக இருந்தது. நாங்கள் கள்ளு குடிக்கும் போதே நல்லாண்டி குவாட்டர் எடுத்து வாயில் கவிழ்த்து கொண்டார்.
இரண்டு தட்டு பீப் கறியை ஒரே ஆளாக தின்று முடித்த மாவிற்கு பெரியதாக போதை பத்தவில்லை. ஆனால் மாமிசம் அவரை கொஞ்சமாக போதை ஆக்கியது.
நல்லாண்டி பாக்கெட்டில் இருந்து பீடி எடுத்து பற்ற வைத்தார். அவர் பீடியை சுகமாக இழுப்பதை பார்த்து கொண்டிருந்த மா வை கவனித்த நல்லாண்டி
" தண்ணி போதைய கொழுத்தனும்னா பீடி வேணும். அப்ப தா போதை பொடனியுல போய் அடிக்கும். இந்தா ஒண்ணு அடி" என பீடியை தருகிறார்.
மா ஆவலாக பீடியை வாங்கி வாயில் வைத்து கொண்டே தீப்பெட்டியை பற்ற வைக்கிறார். அவர் ஒவ்வொரு குச்சியாக எடுத்து பற்ற வைக்க, வைக்க அவரால் கொழுத்த முடியவில்லை. உடனே அந்த கடையில் இருந்த அத்தனை பேரும் அவர் மா தீ குச்சி உரசுவதை ஆவலோடு பார்க்கிறார்கள். 10 குச்சிக்கு மேலாகியும் பீடி புகையவில்லை. நான் அவரிடம் இருந்து பெட்டியை வாங்க போக நல்லாண்டி தடுத்தார். எல்லாரும் அவரை கவனிக்கிறார் என்ற உணர்வு மாவை கோவபடுத்தியது.
நல்லாண்டி மெதுவாக புன்முறுவல் செய்ய மாவிற்கு மூக்கின் மேல் கோவம்..
" கோவ பட்டா போதுமா? ஒரு பீடிய பத்த வைக்க தெரியல நீ எல்லாம் ஆம்பள?"
என்று வெடுக்கென தீப்பெட்டியை பிடுங்க மாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
" நீ இந்த ஒத்த குச்சில கொழுத்தலனா த்தா... இருக்கு"
எனக்கூற நல்லாண்டியின் முகம் சிவந்தது. அவர் படபடவென பீடியை எடுத்து வாயில் வைத்து அடிக்க தயாராகிறார். கடையில் இருந்த மொத்த கூட்டமும் அவரையே பார்க்கிறது . நல்லாண்டி முகத்தில் லேசான பதற்றம்
" ஒரே தடவ தா வாய்ப்பு"
என மா வன்மத்தோடு கத்தினான். கடைக்காரர் எல்லோரும் மொத்தமாக அங்கு குழுமி விட்டனர்.
நல்லாண்டிக்கு முகம் வேர்த்து மொத்த போதையும் இறங்கி விட்டது.
கை நடுங்க அவர் பீடியை பற்ற வைக்க தீ குச்சியை உரச அதன் குச்சியின் கருப்பு மருந்து கிழிந்து கள் பாட்டிலில் போய் விழுந்தது. கூட்டம் மொத்தமும் தலையில் கை வைத்து கொண்டது. கடைக்காரர் பழக்கப்பட்ட ஒன்றை போல அதனை கடந்து போனார். தீக்குச்சி கறி மருந்து கள் பாட்டிலில் மிதப்பது என்னை பயப்பட வைத்தது.
மாவின் முகத்தை பார்க்க துணிவில்லாமல் வெட்கி தலை குனிந்த நல்லாண்டி கரடியை போல் உள்ளுக்குள் உறிமி கொண்டிருந்தார். மா வெற்றி புன்னகையில் நல்லாண்டியை பார்த்து
" என்னப்பா நல்லாண்டி.. அப்ப உன் புள்ள உனக்கு பிறந்தது இல்லையா?"
என கெட்டது தான் மாயம் கண நேரத்தில் என்னவெல்லாமோ நடந்து விட்டது.
கல்யாணத்துக்கு வந்த மாவின் கல்லறையை பார்க்க நானும் கல்யாணம் நின்று போன என் நண்பரும் வந்திருந்தார். இருவரும் முன்பை போல அவ்வளவாக பேசி கொள்வதில்லை. இன்னும் பல ஆண்டுகள் இருந்திருக்க வேண்டிய மா இப்போது இல்லை. நல்லாண்டியை கடைசியாக கோர்ட்டில் பார்த்தது. தான் நிதானம் இல்லாமல் செய்த அந்த செயலுக்காக அவர் துளியும் வருந்தவில்லை என்பது அவர் கண்களில் தெரிந்தது. இறுதியாக மாவின் கல்லறைக்கு மாலை இட்டோம் . மாவின் கல்லறையில் "வார்த்தைகள் நெருப்பை விட ஆழமாக சுட கூடியவை" என எழுத பட்டிருந்தது. இப்போது அந்த கள்ளு கடை மூடப்பட்டு விட்டது. ஆனாலும் அந்த சுவர்களில் இரத்த கறை படிந்து தான் இருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக